Wednesday, November 30, 2016

அபாயம்


தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர். காவல்நிலையத்திற்கு அருகே வீடு, இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில், அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

போனை எடுத்த சில நொடிகளில், பதற்றத்துடன் " உடனே அந்த இடத்துக்கு வந்துரேன் " எனக் கூறி இணைப்பினை தூண்டித்து, உடனே தடயவியல் நிபுணர் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் தீ சூழ்ந்த அந்த இடத்தை காவல் குழுவினரும், தடயவியல் நிபுணர் குழுவினரும் அடைந்த போது, அங்கே தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி கொண்டு இருந்தனர். சைரன் ஒலியுடன், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. சில நிமிட போரட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் எரிந்த தீ அணைக்கப்பட்ட உடன், சப் இன்ஸ்பெக்டர், தடயவியல் நிபுணர் குழுவுடன், புகை மண்டலத்துடன், நிசப்தமாக இருந்த வீட்டினுள் நுழைந்தார்.

வீட்டினுள் யாரேனும் உள்ளனரா என கவனமாக பார்த்து கொண்டு இருக்கும் வேளையில், சமையலறை பகுதியில் இருந்து," என்னங்க, என்னங்க " என மெல்லிய குரல் கேட்க தொடங்கியது. பதற்றத்துடன் சப் இன்ஸ்பெக்டர், சமையல் அறை பகுதியை அடைந்ததும், அவரின் கை கால்கள் நடுங்கியது. முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த கணவனின் உடலருகே, 90% தீயினால் பாதிக்கப்பட்ட மனைவி, கணவனை அழைத்தவாறு கிடந்தாள். அடுத்த சில நொடிகளிலே, இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் சப் இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்சில் ஏறினார். வாழ்வில் முதல் முறையாக, ஒருவர், உயிருக்கு போராடுவதை காண முடியாமல் தவித்தார். காவல் துறை வழக்கப்படி, வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன், உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்ணிடம், தீ விபத்து எப்படி நடந்தது, என கேட்க தொடங்கினார்.

அதற்கு அப்பெண், " எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகுது. நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். நேத்து பால் காச்சுன போது, எதிர்பாரத விதமா, சூடான பால் என் கையில கொட்டிடுச்சு. எனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு நெனச்ச என் கணவர், இன்னைக்கு சமையல, அவரே பண்ணுறேனு சொன்னாரு. நான் சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுக்குள்ள நூழையறப்ப தான் அந்த கோர சம்பவம் என் கண் முன்னாடி நடந்துச்சு. பெரிய வெடி சத்ததுடன் வந்த தீ, என் கணவர் மேல பட்டு எரிய ஆரம்பிச்சு. நான் அவர காப்பாத்த போனப்ப, என் மேலயும் தீ பரவிடுச்சு. எங்க வீட்டுல இருந்த கேஸ் ஸ்டவ்வு, கேஸ் ட்யூபு, ரெகுலேட்டரு எல்லாமே புதுசு தான். எல்லாமே சரிய இருந்தும் எப்படி வெடிச்சதுனு தெரியல. தயவு செஞ்சி என்னைய காப்பாத்திடாதீங்க. " என கூறிய சில நிமிடங்களில், அவள் தன்னுடைய கணவனை சொர்க்கத்தில் சந்தித்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. விபத்து தொடர்பாக, உயர் அதிகாரியை சந்திக்க, காவல் நிலையம் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு, தடயவியல் நிபுணரிடம் இருந்து போன் கால் வந்தது. போனில் தடயவியல் நிபுணர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டதையும், எவ்வாறு நடந்தது என விவரித்ததும் பீதியுற்றார்.

காலண்டரில் தேதியைப் பார்த்தார். 10, அக்டோபர், 2016. உடனே தனது மனைவிக்கு கால் செய்தார். அவள் போனினை எடுக்கவில்லை. பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடினார். வீட்டை அடைந்ததும், சமையலறைக்குள் வேகமாக சென்று, சிலிண்டரின் மேல் பகுதியினை பார்த்தார். அதில் B-16 என எழுதப்பட்டு இருந்தது. உடனே, அந்த சிலிண்டரை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், போன் செய்து, காலாவதியான சிலிண்டரை திரும்ப பெற்று கொள்ளுமாறு கூறி நிம்மதி அடைந்தார்.

நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு Expiry Date உள்ளது. அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக, A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு, பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.

அதை புரிந்து கொள்ளும் முறை.

A - January to March

B - April to June

C - July to September

D - October to December

எண்கள் - வருடத்தை குறிக்கும்

B-16 என்றால் June, 2016 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.

ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால், அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு, நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும். (  படத்தில் உள்ள சிலிண்டர், டிசம்பர் 2017ல் காலாவதியாகும். இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் Expiry Date – ஐ சரி பார்த்துக் கொள்ளவும்)

Friday, November 18, 2016

ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை


ஏ டி எம் இலக்கிய க்ளாசிக் வரிசை.

( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக் கேடு.)

-@-

குப்புசாமி வாத்தியார் ஐபோன் 7 வாங்கி அதை 12ம் வகுப்பு வகுப்பறைக்குக் கொண்டு சென்றார். மேசை மீது வைத்துப் பாடம் நடத்தும்போது அது காணாமல் போய்விட்டது.

வாத்தியார் நேராக ஹெட்மாஸ்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டார். மைக்கில் அறிவித்தார். திருட்டுப் போன என் போனைக் கண்டுபிடிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்போக்கிறேன். எல் கே ஜி முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் வரிசையாக 12ம் வகுப்பிற்குச் சென்று தாம் வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் காண்பித்து விவரம் சொல்லவேண்டும். இதுதான் அவரின் கட்டளை.

அனைத்து மாணவர்களும் கால் கடுக்க வரிசையில் நின்றார்கள். எல் கே ஜி குழந்தைகள் அழும்போது அவர்கள் தலையில் குட்டு விழுந்தது. 12ம் வகுப்பு மாணவர்களே அமைதியாக இருக்கும்போது உங்களுக்கென்ன தடிமாடுகளா என்று வசைச்சொல்லர்ச்சனை கிடைத்தது. அவர்களிடமிருந்த சாக்லெடுகள், லாலிபாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எல்லாம் முடிந்தும் போன் கிடைக்கவில்லை. லாலிபாப்பைப் பார்த்து தலையில் கை வைத்துக்கொண்டவர் போன் தொலைந்துபோன 12ம் வகுப்பை குப்புசாமி வாத்தியார் கண்டுகொள்ளவே இல்லை.

தனது போன் திரும்பக் கிடைக்கும் வரை எல் கே ஜி முதல் 11ம் வகுப்பு வரை தினம் ரெய்டு தொடரும் என்று அறிவித்தார்.

ஐபோனை லவுட்டியவர்களுக்கு தெளிவான செய்தியை குப்புசாமி வாத்தியாரின் அசாத்திய செயல்திட்டங்கள் தெரிவித்தன. ஸ்கெட்ச் நமக்கில்லை என்பதும் அந்த ஐபோனை விற்று அதில் குப்புசாமி வாத்தியாருக்கு அவர் பெயர் பொறித்த ஒரு பட்டுச் சட்டை பரிசளிக்கவும். தங்கள் செலவிலேயே அக்கம் பக்கத்து ஊர்களுக்குக் கூட்டிச் சென்று டெண்ட் கொட்டாயில் ஈஸ்ட் மென் கலர் படத்தைக் காட்டி அவருடன் கொட்டாய் வாசலில் செல்பி எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்தனர்.

இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் எல் கே ஜி மாணாக்கர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கப் போவதாக குப்புசாமி வாத்தியார் உச்ச ஸ்தாயியில் மேசையைத் தட்டி உணர்ச்சிகரமாக கர்ஜித்துக்கொணிருந்ததைப் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் அவர் மூலம் வேறு எதை உருவலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

12ப்பு மாணவனைப் பார்த்து உன்னைய ஏன் இன்னும்  குப்புசாமி வாத்தியார் செக் பண்ணல என்று கேட்ட எல் கே ஜி மாணவனுக்கு நம் பள்ளிக்கூடத்தின் நன் மதிப்புக்காக இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளமாட்டாயா என்று தலைமேல் கொட்டு கிடைத்தது. ஏண்டா நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பதில் சொல்ற என்று கேட்டதற்கு, பள்ளிக்கூட வாட்ச்மென் வெயிலில் நின்று பெல் அடிக்கிறார், ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து வாய்ப்பாடு படிக்க உனக்குக் கசக்கிறதா என்ற பதிலில் தலை சுற்றி மயங்கி விழுந்தான் எல் கே ஜி மாணவன்.

ஏன் தம்பி வாத்தியார் போனக் கண்டுபிடிப்பதும், திருடியவர்களுக்கு தண்டனை தருவதும் நல்லதுதானே என்று அந்த எல் கே ஜி மாணாக்கனிடம் கேட்கப்பட்டது. என்னைப் பரிசோதித்ததையோ, என் லாலிபாப்பை வாங்கிக்கொண்டதையோ நான் குற்றம் சொல்லவில்லை. அவர் போன் தொலைந்துபோன 12ப்பை ஏன் பரிசோதிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்ற பதில் கிடைத்தது.

பள்ளியில் படிக்காத ஆசிரியரின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன்கள் நாங்கள் யாரும் பாதிக்கப்படவில்லையே? எங்களை யாரும் வரிசையில் நிற்கச் சொல்லவில்லையே ஏன் பொய்யாக செய்தி பரப்புகிறீர்கள் என்று அந்தப் பள்ளி மாணவர்களைக் கடிந்துகொண்டார்கள்.

அனைத்து மாணவர்களையும் பரிசோதித்தார்களா? இல்லை சில மாணவர்களே மீண்டும் , மீண்டும் வருகிறார்களா என்று சந்தேகம் அடைந்த குப்புசாமி வாத்தியார், பரிசோதித்து முடிந்த மாணாக்கர்களுக்கு நெயில்பாலீஷ் தடவும் ஐடியாவைக் கொண்டுவந்திருக்கிறார். போனை லவுட்டிய ஆளுக்கே அந்த காண்டிராக்டும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

புதிய போன் வாங்க எல் கே ஜி முதல், 11ம் வகுப்பு வரை வழுக்கி விழுந்த வாத்தியார் நிதி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதற்கு அனைவரும் நிதி அளிக்கவேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த நிதியை வசூலிக்கும் பொறுப்பு 12ப்பு மாணவர்களிடம் அளிக்கப்பட்டது.

குப்புசாமி வாத்தியாரைப் பார்த்துப் பாராட்டிய 12ப்பு மாணவர்கள், எப்படி இவ்வளவு தெளிவான , தைரியமான முடிவினை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,

If you don't know anything, create a problem and don't solve it..

என்று ஏற்ற இறக்கத்துடன் கண்கள் விரியச் சொன்னதைப் பார்த்த 12ப்பு மாணவர்கள் அடுத்து வாத்தியார் வாங்கப்போகும் ஐபோன் 7எஸ் நமக்குத்தான் என்று நிம்மதியடைந்தனர்.

குப்புசாமி வாத்தியார் போனை கண்டுபிடிப்பாரா? 7S போன் யாருக்குக் கிடைக்கும்?

சுபம்.
*.

Monday, October 31, 2016

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும்

குட்டிப் பையன் தாம்ஸன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். வீட்டில் இருந்து ஒரு அரை மணி நேரத்தில் நடந்து போய்விடும் தூரத்தில்தால் அவர்களின் தோட்டம் இருந்தது.
பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று இருந்தது. ஏராளமான குருவிகளும் , தும்பிகளும் இங்கும் அங்குமாகப் பறந்து , பார்ப்பதற்கு மிகுதியான உற்சாகத்தை உண்டாக்கின . அவர்களுடைய தோப்பு சுற்றிலும் வேலி அடைக்கப்பட்டு , ஒரு இடத்தில் கதவு வைக்கப்பட்டுப் பூட்டப் பட்டிருக்கும். அதைப் பராமரிக்க ஒரு வேலையாள் இருந்தார். அவரது வீடு தோட்டத்துக்கு அருகிலேயே இருந்தது .
சாவி வாங்குவதற்காக இருவரும் அத்த வீட்டுக்குள் போனார்கள் . தோட்டக்காரர் அவர்களை அன்போடு வரவேற்று அமர வைத்தார் . அவர் வீட்டில் வான் கோழிகளும் , முயல்களும் , மாடுகளும் இருந்தன . தாம்ஸனுக்கு அவற்றையெல்லாம் பார்ப்பதில் ஒரு குதூகலம் வந்துவிட்டது. முயல்களைத் துரத்திக் கொண்டு கொல்லைப் பக்கம் ஓடினான் .
சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது .
" ஏன் uncle , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Free யா சாப்பிடுமே " என்றான்.
அவர் சிரித்தபடி ,
" தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னுதான் பாப்பமே " என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் .
அப்பா உடனே ,
" என்ன பன்னீர் , சின்னப் பையன் ஏதோ சொல்றான்னுட்டு நீங்களும் இப்படி செய்றீங்களே " என்றார். பன்னீர் ,
" இருக்கட்டும் சார். சின்னப்புள்ள , ஏதோ ஆசப் படுது . என்னதான் ஆகுதுன்னு பாக்கட்டுமே " என்றார்.
அவர்கள் தோப்புக்குப் போய் இளநீரெல்லாம் குடித்துவிட்டு , வேலியில் படர்ந்திருந்த பாகற்காயைப் பை நிறைய பறித்துக் கொண்டு திரும்பும்போது ஒருமணி நேரம் முடிந்திருந்தது. தோட்டக் காரரின் வீட்டுக்கு வந்தவுடனேயே தாம்ஸன் கொல்லைக்குத்தான் ஓடினான்.
அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது.
தோட்டக்காரர் சொன்னார் ,
" கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட
ஆபத்தாயிடும் " சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது . பெரியதொரு விஷயத்தைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் அப்பாவுடன் உற்சாகமாய் வீடு திரும்பினான் .

செல்லமே ,
சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை என்று உணர்ந்து கொள்.

" பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான் "

நீதிமொழிகள் 29 :15

Thursday, October 20, 2016

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். -
சிரிக்க-சிந்திக்க
ஒரு நாள் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய
சுயம்வரம் நடந்தினாங்க.
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப...
“கல்யாணத்தை நிறுத்துங்க”-ன்னு ஒரு குரல்
கேட்டது.
திரும்பி பார்த்தால் போலீஸ்...
போலீஸ் காக்காவை அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.
ஏன்...? ஏன்?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

நினைவு இருக்கா?
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப
காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த
குற்றதுக்கு இப்ப அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.
நீதி.... முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்.

Wednesday, October 19, 2016

நாயும் மொழியும்

பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில்
ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு
சம்பவம் நடந்த்து.....

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்
அனைவரும் தப்பித்தனர்....
ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு  மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...

ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....

காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!

(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும்  என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....

ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய்
பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய
முடிவெடுத்தனர்
எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....

அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....

கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....

அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்
ஏற்பாடு செய்தது

விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது

உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...

உங்களுக்கு என்ன வேண்டும்
கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....

பணம் வேண்டுமா.....?

விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...

அவர் மறுத்துவிட்டார்...

எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...

அதை கேட்டு அங்கிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்....
சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....

ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....

அதற்க்கு அவர்...சொன்னார்....

இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால்  நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....

அவள் சொல்வாள்....

"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...
இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...

அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்

அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..

ஹாஹாஹாஹா......

Thursday, October 13, 2016

சொர்கம்

அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.

ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை.
"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்
வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.
ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.
காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.
அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.
""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!
பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.
""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''
துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.
காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.
திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.
""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து
விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று
இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.
தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.
""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின்
வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''

அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த
காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.
பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத
குறையாகக் கெஞ்சினார்.
""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''
""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''
""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த
உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.
இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்
அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.