Thursday, December 5, 2019

கடவுள்

தீர்க்கமான தரிசனம்
கடவுள் தரிசனம் யாருக்கு கிட்டும்.

இதோ ஒரு குட்டிக் கதை படியுங்கள்.

கடவுள் தரிசனம்  வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..

அதே  போல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்… நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தர வேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டு விட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..

“அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக் கொண்டு வா..காட்சி தருகின்றேன்” என்று சொல்லி மறைந்தார்..

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்..

அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..
சிறிது உயரம் சென்றவுடன்..அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக் கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்..

மன்னன் “அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது… இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்” என்று உரக்க சப்தமிட்டான்..

அதற்கு “மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது” என்று ஒட்டு மொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக் கொண்டு மலையேற
துவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டை கட்ட ஆரம்பித்தனர்

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்..”விலை மதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன”
என்று உரைத்தான்..

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்..

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்..

இப்பொழுது சிறிது தொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகு டும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்று விட..

மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும், தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்..செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக் கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..

அங்கே தென்பட்டது வைரமலை அதைப் பார்த்த ராணி முதற் கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..

மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்..

கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி

“எங்கே உன் மக்கள்” என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக
“அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்” என்றான் மன்னன்..

அதற்கு கடவுள் “நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்..
அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக் கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து…என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்” என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்…

Wednesday, September 11, 2019

நேர்மை

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால்,
அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம்,
உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:
அன்புள்ள ஊழியர்களே,
என்னுடைய ஓய்வுக்குப் பின்,
உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த மேலாளர் என்றார்.

இப்போது என் கையில்,
பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த,
ஏராளமான விதைகள் இருக்கின்றன.
யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது. 

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு,
உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி,
நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும்
ராமகிருஷ்ணன்க்கும் ஒரு விதை கிடைத்தது.
அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அவன் மனைவி தொட்டியும், உரமும்,தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து,
அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. 

நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் ராமகிருஷ்ணன்னின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம்.
செடி வளரவே இல்லை,

நாட்கள் உருண்டோடின.

ஆறு மாதங்கள் ஆனது. 

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார். 

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது. 

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

ராமகிருஷ்ணன் தன் மனைவியிடம்:
காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன்,
எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார். 

அவர் மனைவி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்:
நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள்.

செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.  தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமகிருஷ்ணன் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் அவைகளில் பூத்துக் குலுங்கின.

ராமகிருஷ்ணன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை.

எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

ராமகிருஷ்ணன் கடைசி வரிசையில் நின்றிருந்தார்.
அவரை அருகே வருமாறு அழைத்தார்.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்,
என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் ராமகிருஷ்ணன்.

முதலாளி ராமகிருஷ்ணன் உங்கள் செடி எங்கே?
என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் ராமகிருஷ்ணன்.

முதலாளி ராமகிருஷ்ணனை தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார். 

பிறகு ராமகிருஷ்ணன் தோளில் கையை போட்டுக் கொண்டு:

நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

ராமகிருஷ்ணன்னுக்கு ஒரே அதிர்ச்சி.

தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே!
பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்?
என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?

அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds].

அந்த விதைகள் அவிக்கப்பட்டதால்,
அது முளைக்க இயலாது.
அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால்,
அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ராமகிருஷ்ணன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார்.

ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

*நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.*

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும்,
நேர்மையும்,
தர்மத்தை பாதுகாக்கும்,

நேர்மை ஒரு போதும் வீண் போகாது.

*நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும்.*

புகழ் வர வேண்டாம்.

ஏனெனில்,

அந்த புகழுக்கு உரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே!