குட்டிப் பையன் தாம்ஸன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். வீட்டில் இருந்து ஒரு அரை மணி நேரத்தில் நடந்து போய்விடும் தூரத்தில்தால் அவர்களின் தோட்டம் இருந்தது.
பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று இருந்தது. ஏராளமான குருவிகளும் , தும்பிகளும் இங்கும் அங்குமாகப் பறந்து , பார்ப்பதற்கு மிகுதியான உற்சாகத்தை உண்டாக்கின . அவர்களுடைய தோப்பு சுற்றிலும் வேலி அடைக்கப்பட்டு , ஒரு இடத்தில் கதவு வைக்கப்பட்டுப் பூட்டப் பட்டிருக்கும். அதைப் பராமரிக்க ஒரு வேலையாள் இருந்தார். அவரது வீடு தோட்டத்துக்கு அருகிலேயே இருந்தது .
சாவி வாங்குவதற்காக இருவரும் அத்த வீட்டுக்குள் போனார்கள் . தோட்டக்காரர் அவர்களை அன்போடு வரவேற்று அமர வைத்தார் . அவர் வீட்டில் வான் கோழிகளும் , முயல்களும் , மாடுகளும் இருந்தன . தாம்ஸனுக்கு அவற்றையெல்லாம் பார்ப்பதில் ஒரு குதூகலம் வந்துவிட்டது. முயல்களைத் துரத்திக் கொண்டு கொல்லைப் பக்கம் ஓடினான் .
சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது .
" ஏன் uncle , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Free யா சாப்பிடுமே " என்றான்.
அவர் சிரித்தபடி ,
" தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னுதான் பாப்பமே " என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் .
அப்பா உடனே ,
" என்ன பன்னீர் , சின்னப் பையன் ஏதோ சொல்றான்னுட்டு நீங்களும் இப்படி செய்றீங்களே " என்றார். பன்னீர் ,
" இருக்கட்டும் சார். சின்னப்புள்ள , ஏதோ ஆசப் படுது . என்னதான் ஆகுதுன்னு பாக்கட்டுமே " என்றார்.
அவர்கள் தோப்புக்குப் போய் இளநீரெல்லாம் குடித்துவிட்டு , வேலியில் படர்ந்திருந்த பாகற்காயைப் பை நிறைய பறித்துக் கொண்டு திரும்பும்போது ஒருமணி நேரம் முடிந்திருந்தது. தோட்டக் காரரின் வீட்டுக்கு வந்தவுடனேயே தாம்ஸன் கொல்லைக்குத்தான் ஓடினான்.
அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது.
தோட்டக்காரர் சொன்னார் ,
" கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட
ஆபத்தாயிடும் " சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது . பெரியதொரு விஷயத்தைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் அப்பாவுடன் உற்சாகமாய் வீடு திரும்பினான் .
செல்லமே ,
சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை என்று உணர்ந்து கொள்.
" பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான் "
நீதிமொழிகள் 29 :15