Friday, December 22, 2017

முதலைக் குளம்

ஒரு குட்டிக்கதை;
🍇🍇🍇🍇🍇🍇🍇

ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!

வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,
அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!

போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்... இப்படியாக!

அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.

"இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!"
 
அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது...

"அது மட்டுமில்லை... கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!"

"சரி... உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்!

சொல்லி முடித்தவுடன்... மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது... அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,
டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது!

அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்!

"இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில்  ஜெயிக்கிறான் னு?" “நிச்சயமா எவனாலும், முடியாது!” என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்!

அப்பொழுது,…

திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்!

அத்தனை பெரும் மூச்சுக்கூட விட மறந்து,..
உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்!

அந்த இளைஞன்,.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி,
அடுத்த கரையில் விருட்டென ஏறி,

வெடவெடவென நின்றான்!

பணக்காரனால், தன் கண்களை நம்பமுடியவில்லை!

"பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல,.. உனக்கு என்ன வேணுமோ கேளு!
நான் தர்றேன்! எதுவாக இருந்தாலும்!"

அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை!
வாய் தந்தியடித்தது, மிரட்சியில்!
கண்கள் அரண்டு போய் இருந்தது!
பின், ஒருவித வெறியுடன்...

"அதெல்லாம் இருக்கட்டும்...
என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்!!!

🐊 நீதி-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை... உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்,.. என்பதும் புரியவரும்!!!)

🐊 நீதி-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்...
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)

🐊 நீதி-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!

🐊 நீதி-4 :
சிலருக்கு,.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே,  அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்!)

படித்ததில் பிடித்தது.👍
🎠🎠🎠🎠🎠🎠🎠🎠

Sunday, December 17, 2017

மன்னரின் காலணி

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

மன்னரின் அரசவை...ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..என
தேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே....என.

ஒருவரைஎப்படிஅவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்னஅங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிரான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிரான்.என்றார்

எவ்வளவு போகிறது...

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு...

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதி கேட்டு வந்தவர் மீன்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதிகட்டடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும்..சகிப்புத்தன்மையையும் எண்ணி...தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ
அவர்கள் ஒருநாளும் எதையும்
ஜெயிக்க முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்யம்.

மான அவமானங்களல்ல...

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள்
என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
.
அவமானம் என்பது ஒருவித மூலதனம்.

.
.
.
.
.
.
.
.
அந்த காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது. அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்

*படித்ததில் பிடித்தது*

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதய் பற்றி கருத்துள்ள ஒரு  குட்டிக் கதை,வழங்குபவர் கோவை மணி குருக்கள்..
=======================================

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!

அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் " இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.

அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.

எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.

இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.

சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.

திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.

தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.
மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.

இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.

அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.
அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.

ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.
காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!.இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.
பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!.
சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான்.

அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க".

அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே " என்றான்.

மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். "சரி போ. நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*

நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.

மனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.

குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை!. அவளாகவே சொன்னாள்.

"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் ".போய் பார்த்தான்.

அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.

மனைவி சொன்னாள், " எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.

அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா? ".

அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.

அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான்.
முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.

சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.

வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக  பார்க்காதீர்கள்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.

குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..!.

பெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும் காரணம்.....!!!!

Saturday, December 9, 2017

மரம்

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன !!
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி  முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது


அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது


குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச்சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து குருவி சிரித்து கொண்டே சொன்னது , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று !!!!

அதற்கு அந்த மரம் கூறிய பதில் : எனக்குத் தெரியும் நான் வழுவடைந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன் , தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று , நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!!


கருத்து: உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...💐😊🙏🙏🙏

Love you all!

ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம்  இருந்தது.அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும். ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.

அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது. ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது  பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார். உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.

உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி

மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி

நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய்  வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து  சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'

அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது  அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…

அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென  பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.

மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி  சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட்  இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி  மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை  சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...

Mrs. Sumathi
‘I have seen many more people in my life.  are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore PhD…..

அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு  இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார். அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை  அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி  பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
.
.
.
அன்பான ஆசிரியர்ரகளே
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக  இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.

அன்பு உள்ளங்களே, உங்கள் பங்கிற்கு  தெரிந்த ஆசிரியர்களுக்கு இதனை அனுப்புங்கள்.. ஆசிரியர்களை ஊக்கப்படுத்துங்கள், உற்சாகமூட்டுங்கள்..ஏனெனில் நாளைய சமுதாயத்தை நல்ல முறைப்படுத்த ஆசிரியர்களால் மட்டுமே முடியும் 🙏

Thursday, November 2, 2017

டீச்சர்.(சிறுகதை)

டீச்சர்.(சிறுகதை)

'பேரு சொல்லுங்க!''
       'கலைவாணி.''
'வயசு?''
          '30.''
'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்?''
         'இன்னும் கல்யாணம் ஆகலை.''

'நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வொர்க் பண்ணிருக்கீங்க...''

'ஆமா.''

'ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான் திரும்பவும் உங்களுக்கு இந்த ஸ்கூல்ல போஸ்ட்டிங் கிடைச்சதுக்குக் காரணம்.''

கலைவாணி அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிரித்தாள். சத்தம் இல்லாத விரக்தியான சிரிப்பு. சப் இன்ஸ்பெக்டர் வினோத், அசிஸ்டென்ட் கமிஷனரையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தார். அவர்கள் கலைவாணியை முறைத்தபடி இருந்தார்கள்.

'மிஸ் கலைவாணி. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணை நீங்க அடிச்சிருக்கீங்க. அவமானம் தாங்க முடியாம, அந்தப் பொண்ணு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு சாகக்கெடக்கிறா. ஈவ்னிங் பேப்பர்ல இதுதான் பேனர் நியூஸ். சேனல்ல செய்தி அனல் பறக்குது. நூத்துக்கணக்கான பேரன்ட்ஸ் ஸ்கூல் வாசல்ல நிக்கிறாங்க. மேலிடத்துல இருந்து நிமிஷத்துக்கு ஒரு போன். நாங்க எங்க டியூட்டில கரெக்ட்டாதான் இருக்கோம். "

'ஸாரி சார்... அந்தப் பொண்ணு நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணப்போறதா முடிவு எடுத்ததா, ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருக்காளா?''

'மேகநாதன்... அந்த நோட் புக் எடுங்க.''

இன்ஸ்பெக்டர் மேகநாதன் எடுத்துத் தந்த நோட்டை வாங்கி, கலைவாணியிடம் நீட்டினார். பள்ளிக்கூட நோட் அது. அவர் பிரித்துத் தந்த பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள் கலைவாணி.

'கலைவாணி டீச்சர் என்னை அறைந்தது, என் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.’

மனசுக்குள் ஏதோ ஒன்று அறுந்தது கலைவாணிக்கு. ஓர் இறுக்கம் படர்ந்தது. திடுமென கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருட்டுவதுபோல மனதைக் கவலை கவ்வியது. ஏன் இந்த உத்தியோகம்? அப்பா, எல்லா பெண் பிள்ளைகளையும்போல என்னையும் வளர்த்திருக்கக் கூடாதா... வேறு உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்கக் கூடாதா?

'வாத்தியார் உத்தியோகத்தைத் தெய்வமா நெனக்கிறவன். மனசுக்கு நிறைவான தொழில். அங்கன்வாடியில டீச்சர் உத்தியோகம் வாங்கிறதுக்குப் பெரும்பாடு பட்டுட்டேன்.  நீ படிக்கணும்; பரீட்சை எழுதணும்; டீச்சர் ட்ரெய்னிங்ல பாஸ் பண்ணணும். மிடில் ஸ்கூல்,ஹைஸ்கூல், செகண்டரி டீச்சர்,ஹெட்மிஸஸ்னு மேல மேல போகணும். படிப்படியா மேல போனாதான், கல்வியோட மேன்மை தெரியும்; மாணவர்களின் சைக்காலஜியும் புரியும். எதிர்காலத்துல சிறந்த கல்வியாளரா வர முடியும்’ - முதல் நாள்,பள்ளிக்கூடம் போனபோது அப்பா கூறிய வார்த்தைகள் இவை.

ஆனால், அப்பா கூறியபடி கலைவாணி படிப்படியாக வளரவில்லை. மூன்று தாவல்களில்,எட்டே வருடங்களில் செகண்டரி டீச்சர். அவள் வளர்ச்சியைப் பார்க்க அப்பாவும் இல்லை;மகிழ்ந்து கொண்டாட அம்மாவும் இல்லை. அந்த வெறுமையைப் பணியில் செலுத்தினாள். கல்வியைத் தாண்டி மாணவர்கள் ஒழுக்கமாக,பண்பாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். அந்த உணர்வுடன் மாணவர்களைச் செம்மைப்படுத்தினாள். அந்த முயற்சியில்... இது இரண்டாவது சறுக்கல்.

'சார்... இந்தத் தற்கொலை முயற்சிக்கு நான் காரணம் இல்லையே...''

'லாஜிக்கலா கரெக்ட் மேடம். ஆனா, சாயங்காலம் உங்ககிட்ட அடிவாங்கின பொண்ணு, நைட்டு தற்கொலைக்கு முயற்சி பண்றானா, அதுக்கு உங்க நடவடிக்கைதானே காரணமா இருக்க முடியும்?நீங்க அந்தப் பொண்ணை அடிச்சதை ரெண்டு ஸ்டூடன்ட்ஸ் பார்த்திருக்காங்க, சில டீச்சர்ஸும் பார்த்திருக்காங்க. ஸ்கூல்ல நாங்க நடத்தின விசாரணையில எல்லாரும் உங்களைத்தான் கை காட்டுறாங்க.''

'உடனே என் வீட்டுக்கு ஜீப்ல வந்துட்டீங்க. 'வாங்க மேடம்’னு கட்டின புடவையோடு விசாரணைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க'' - கலைவாணி அடக்க முடியாமல் அழுதாள்... விசும்பியபடியே பேசினாள்.

'சார்... போன வாரம்தான் எங்க தெருவுல இருக்கிற ஒரு வீட்டுல போலீஸ் புகுந்து மூணு பொண்ணுங்களை அழைச்சுட்டுப் போனாங்க. இன்னைக்கு நீங்க இப்படி காக்கிச் சட்டையோடு என் வீட்டுக்கு வந்ததைப் பார்த்தவங்க, தனியா இருக்கிற என்னைப் பத்தி தப்பா நினைக்கலாம் இல்லையா?''

ஏ.சி சில விநாடிகள் தடுமாறினார். சப் இன்ஸ்பெக்டர் வினோத்தைப் பார்த்தார். அவர் தலைகுனிந்தார்.

'அதைவிடுங்க மிஸ் கலைவாணி. நாம விசாரணைக்கு வருவோம். ஏன் அந்தப் பொண்ண அடிச்சீங்க?''

'ஹோம்வொர்க் பண்ணலை. காரணம் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் இல்லை. எதிர்த்துப் பேசினா...''

'அதுக்கு கிளாஸ் ரூம்ல கண்டிக்காம, ஸ்கூல் விட்டதும் கிளாஸ் ரூமுக்கு வெளியே வெச்சு ஏன் அடிச்சீங்க?''

'சார்.... 'அடிச்சீங்க... அடிச்சீங்க...’னு திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை யூஸ் பண்ணாதீங்க. நீங்க கேக்கிற விதத்தைப் பார்த்தா, நான் ஏதோ திட்டம்போட்டு உள்நோக்கத்தோடு அவளை அடிச்சது மாதிரி இருக்கு. ஒரு கிளாஸ் டீச்சருக்கு ஸ்டூடன்ட் மேல எல்லாவிதமான உரிமையும் இருக்கு. காலையில ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு வந்துட்டு புள்ளைங்க வீட்டுக்குப் போன பிறகுதான் நாங்க கிளம்புறோம். டீச்சிங்கைத் தாண்டி ஏகப்பட்ட வேலைகள் எங்களுக்கு இருக்கு. 'ஏன் ஹோம்வொர்க் பண்ணலை?’னு கேக்கிற உரிமை ஒரு டீச்சருக்கு இல்லையா?

நான் ஸ்கூல் கவுன்சலிங் போர்டுல மெம்பர். ஒரு நாளைக்கு எத்தனை புகார்கள் வருது தெரியுமா?ஸ்டூடன்ட்ஸ் என்ன மாதிரி பிரச்னையை எல்லாம் ஃபேஸ் பண்றாங்க... கிளாஸ் ரூம்ல என்ன நடக்குதுனு உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல்ல நாங்க கொடுக்கிற கவுன்சலிங்ல, புள்ளைங்க மேல பெர்சனலா காட்டுற அக்கறையாலதான் இன்னைக்கு பல பேரன்ட்ஸ் நிம்மதியா இருக்காங்க. டீச்சர்ஸ் அவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தா, தினமும் ஒரு ஸ்டூடன்ட் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவாங்க. விவரம் தெரியாம அவங்களே உருவாக்கிக்கிற பிரச்னைகள்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. உங்களுக்கு டென்த், ப்ளஸ் டூ படிக்கிற புள்ளையோ, பொண்ணோ இருந்தா கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரவெச்சு 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது!’னு நட்பா கேளுங்க. அது சொல்லும்.''

சப் இன்ஸ்பெக்டர் வினோத் அழுத்தமான குரலோடு குறுக்கிட்டார். 'மேடம், எங்களுக்கு உங்க அட்வைஸ் தேவை இல்லை. உங்க செய்கைக்குத் தனிப்பட்ட விரோதம் ஏதாவது இருக்காங்கிறதுதான் எங்க விசாரணையின் நோக்கம். பள்ளிக்கு உள்ள நடக்கிற பிரச்னைகளோட பின்னணி பத்தி பலவிதமா யூகிச்சு விசாரிக்கவேண்டிய சூழ்நிலை.''

'அப்படி எதுவும் இல்லை. ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணோடு சப்ஜெக்ட் தாண்டி வேற பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.''

'அப்படியா? நேத்து ராத்திரி பத்தே கால் மணிக்கு பிரியாகூட செல்போன்ல நாலு நிமிஷம் பேசி இருக்கீங்களே... என்ன பேசினீங்க?''

கலைவாணி நிலைகுலைந்தாள்.

'உங்களுக்குப் பிடிக்காத ஸ்டூடன்ட்ஸ் மொபைல் நம்பர் வாங்கிட்டு, அவங்களை ராத்திரி நேரத்துல கூப்பிட்டுத் திட்டுவீங்கனு உங்ககூட வேலைபார்க்கிற சில டீச்சர்ஸ் எங்க விசாரணையில சொன்னாங்களே... அது உண்மையா?''

கலைவாணி வெற்றுப்பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

'பதில் சொல்லுங்க மேடம்.

தஞ்சாவூர் ஸ்கூல்ல நடந்த சம்பவத்துக்குப் பிறகு ஸ்டூடன்ட்ஸ்கிட்ட மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாமே... ஏன் உங்களை மாத்திக்கலை?''

'என்னை மாத்திக்கணும்னு நான் நினைக்கிற அளவுக்கு என்கிட்ட தவறு இல்லை. என்கிட்ட படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் மேல எனக்கு அபரிமிதமான அன்பும் அக்கறையும் உண்டு. அவங்களை நல்லா கொண்டுவரணும்னு நினக்கிறப்ப, சில சமயம் இதுமாதிரி நடந்திடுது.''

'அடிச்சு அவமானப்படுத்தித் தற்கொலைக்குத் தூண்டுறதா? அந்தப் பொண்ணு செத்துப்போனா,உங்க மேல சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.''

'அப்படி நடந்தா பார்க்கலாம் சார்.''

ஏ.சி பேசினார்... 'கலைவாணி... இது சென்சிட்டிவான கேஸ். ஒரு பக்கம் அந்தப் பெண்ணோட பேரன்ட்ஸ்; இன்னொரு பக்கம் எங்க ஹையர் ஆபீஸர்ஸ். பிரச்னையோட தீவிரத்தை உணர்ந்துதான் நான் இங்க வந்திருக்கேன். கடந்த நாலு மணி நேரமா எல்லா டி.வி-லயும் இந்த செய்திதான். நாளைக்கு நியூஸ் பேப்பர்ஸ், வாரப் பத்திரிகைகள் எல்லாம் இதைக் கையில எடுத்திடும். அந்தப் பொண்ணு நல்லபடியா வீடு திரும்பிட்டா, உங்க எதிர்காலத்துக்கு நல்லது. கடவுளை வேண்டிக்கங்க...''

ஏ.சி செல் ஒலித்தது. எடுத்துப் பேசியவர் முகம் மாறியது. லைனை கட் செய்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.

'என்ன சார்?'' - இன்ஸ்பெக்டர் கேட்டார்.

'அந்தப் பொண்ணு செத்துட்டா.''

கலைவாணிக்கு உடம்பு நடுங்கியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. பிரியாவின் துறுதுறு முகமும், வகுப்பில் அவள் முதல் பெஞ்சில் அமர்ந்து பாடம் கேட்கும் விதமும் மனதில் ஓடின.

'சார், பேரன்ட்ஸ்க்குத் தெரியுமா?''

'எல்லாரும் ஆஸ்பத்திரிலதான் இருக்காங்க...''

அவர் அப்படிக் கூறி முடித்த அடுத்த விநாடி... போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாகன இரைச்சல்.

சாதிக் கட்சி கொடியோடு ஏராளமான வாகனங்கள் வந்து நின்றன. தபதபவென ஆட்கள் ஆவேசமாக இறங்கினார்கள். படார் படாரெனக் கதவுகள் சாத்தப்படும் சத்தம். பத்து, இருபது, முப்பது பேர் இருப்பார்கள்.

'ஏய் வாத்திச்சி... வெளியே வாடி!''

'எதுக்கு அவளைக் கூப்பிடுற... உள்ள புகுந்து தூக்குங்கடா அவளை..!'' - ஒரு குரல் கட்டளையிட, அதை ஏற்றுக்கொண்டு ஆவேசக் கூச்சலோடு கும்பல் முன்னேறியது; போலீஸ் ஸ்டேஷனைச் சூழ்ந்தது. காதைப் பொசுக்கும் ஆபாச வார்த்தைகள் வீசப்பட்டன. பெண் காவலர்கள் பதற்றமாக ஏ.சி-யைப் பார்த்தார்கள்.

ஏ.சி., சேரில் இருந்து எழுந்தார். 'கலைவாணி... நீங்க உள்ள போங்க.''

கலைவாணி தயக்கமாக நிற்க... அந்தப் பெண் காவலாளி, கலைவாணியின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றார்.

ஏ.சி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மூவரும் வெளியே வந்து, ஸ்டேஷன் வாசலை மறைத்து நின்றனர்.

'எங்க புள்ளயை அநியாயமா கொன்னுட்டா அந்த வாத்திச்சி. அவளை வெளியே அனுப்புங்க'' -முன்னேறிய கூட்டம், ஏ.சி-யைப் பார்த்ததும் பின்வாங்கியது.

ஏ.சி குரல் உயர்த்தினார். 'போலீஸ் ஸ்டேஷன்ல கலாட்டா பண்ணக் கூடாது. கலைஞ்சு போயிடுங்க. நாங்க விசாரிச்சுட்டு இருக்கோம். சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செய்வோம். என்ன சம்பந்தம், கூட்டம் சேர்த்துக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனை கேரோ பண்றீங்களா? விளைவு மோசமா இருக்கும்'' -கூட்டத்தின் முன்னால் நின்ற அறிமுகமான ஒரு பிரமுகரை ஏ.சி அதட்டினார். அவர் நெளிந்தார்.

'மேகநாதன்... செல்போன்ல இந்தக் கூட்டத்தை போட்டோ எடுங்க.''
ஒருவரையொருவர் பார்த்தபடி பின்வாங்கினார்கள்.

கான்ஸ்டபிள்கள், அருகில் இருக்கும் ஸ்டேஷனுக்கு நிலைமையைப் பகிர்ந்தார்கள். மைக்கில் டி.சி ஆபீஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் போனது. போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பைக் கூட்டத்தினர் உணர்ந்து, நிதானத்துக்கு வந்தார்கள்.

சாதிக் கட்சிக் கரை வேட்டி அணிந்து தோளில் தளரத் தளரத் துண்டு போட்டிருந்த அவர்,வாய்விட்டு அழுதவாறு பேசினார். 'ஒரே பொண்ணு சார். அநியாயமா பறிக்கொடுத்துட்டோம். பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய டீச்சர், ஏன் சார் கை நீட்டணும்? நல்லதா நாலு விஷயங்கள் கத்துக்கிட்டு வருவாங்கனுதானே பள்ளிக்கூடம் அனுப்புறோம். அடிச்சு அவமானப்படுத்தவா அனுப்புறோம்? நானோ என் பொண்டாட்டியோ ஒரு வார்த்தைக்கூட பிரியாவைக் கண்டிச்சது இல்லை. கேட்டதை வாங்கிக் கொடுத்திருவோம். அப்படி ஒரு செல்லம் சார். என் குடும்பத்துக் குலவிளக்கு. தவம் இருந்து பெத்த புள்ள. அவளை அநியாயமா சாகக் கொடுத்துட்டு நிக்கிறோம். கல்யாணமாகி, குழந்தை... குட்டினு இருந்தா அந்த வாத்திச்சிக்குப் புள்ளைங்க அருமை தெரியும். அவளை விட மாட்டேன் சார். எவ்வளவு நேரம் உள்ளே வெச்சிருப்பீங்க? எத்தனை நாளைக்கு போலீஸ் காபந்து கொடுப்பீங்க... பார்த்திடலாம்.''

ஆவேசமாக வந்த வாகனங்களில் திரும்பி ஏறினார்கள். வாகனங்கள் நகர்ந்தன.

ஏ.சி., டி.சி-யைத் தொடர்புகொண்டார். நிலைமையை விளக்கினார். அவர் நிதானமாகப் பேசினார். 'பொண்ணு பாடி போஸ்ட்மார்ட்டத்துக்குப் போயிருச்சு. சூசைட் நோட் தெளிவா இல்லை. டீச்சர் அடிச்சிட்டாங்கனுதான் இருக்கு. செல்போன்ல பேசினதுக்கு ரெக்கார்ட்ஸ் கிடையாது. சிக்கலான கேஸ். மேலிடத்துலேர்ந்து தெளிவான இன்ஸ்ட்ரக்ஷன் வர்ற வரைக்கும் அவசரப்பட்டு நாமளா ஏதும் செய்ய வேணாம். ஜே.சி-யும் அதைத்தான் ஃபீல் பண்றார்.''

'டீச்சருக்குப் பந்தோபஸ்து வேணும் சார். த்ரெட்டன் இருக்கு. அவங்க வெளியே போனா ஆபத்து.''

'நானும் மைக்ல கேட்டேன். ஸ்டேஷன்ல வெச்சுக்காதீங்க. சேஃப்ட்டியா வீட்டுக்கு அனுப்பி பந்தோபஸ்து போட்டுருங்க. ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிக்கங்க.''

'ஓ.கே சார்.''

ஏ.சி., இன்ஸ்பெக்டரையும் சப் இன்ஸ்பெக்டரையும் அழைத்தார்.

வினோத் உள்ளே வந்தபோது, கலைவாணி மேஜையில் தலை கவிழ்ந்து அழுதுகொண்டிருந்தாள். சில விநாடிகள் தயக்கமாக நின்றிருந்தார். 'மேடம், ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்திட்டு நீங்க வீட்டுக்குப் போகலாம். உங்களுக்குப் பந்தோபஸ்து கொடுக்கச் சொல்லி, எங்களுக்கு உத்தரவு. அடுத்து என்ன பண்றதுனு காலையிலதான் மேடம் தெரியும்.''

கலைவாணி, விரக்தியாகச் சிரித்தாள்.

'மனசு நொறுங்கிருச்சு சார். ஸ்டூடன்ட்டோட சைக்காலஜி தெரிஞ்சவங்கிற கர்வம் எனக்கு உண்டு. அதுக்கு மரண அடி விழுந்திருக்கு. ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் என்னை மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அது தப்புனு புரியுது.

சந்தோஷமா ஈடுபாட்டோடு வேலைபார்த்தேன். ஆனா, இப்ப என்னவோ தெரியல. மனசுக்குள்ள வெறுப்பு வந்துருச்சு.''

வினோத், கலைவாணியைப் பார்த்தபடி பேப்பர் எடுத்துக் கொடுத்தார்.

வளையலை மேலே தள்ளி, கையோடு இறுக்கிக்கொண்டாள். மேஜையில் இருந்து பேனா எடுத்தாள்... யோசித்தாள். தெளிவான கையெழுத்தில் எழுதத் தொடங்கினாள்.

ஏட்டு, எஸ்.ஐ பக்கத்தில் வந்தார்.

'சார்... டீச்சரம்மா எழுதித் தர்றபடி தரட்டும். நாம ஸ்டேஷன் டைரியில ஸ்டேட்மென்ட் எழுதணும். அந்தப் பாப்பா என்ன சார் குடிச்சது? விஷமா இல்லை... தூக்க மாத்திரையா? விவரம் வேணும் சார்.''

'கேட்டுச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருவோமா?''

வினோத், செல்போனில் நம்பர் போட்டார். கன்ட்ரோல் ரூமைப் பிடித்தார். 'ஸ்கூல் பொண்ணு சூசைட் கேஸ். போஸ்ட்மார்ட்டம் இன்சார்ஜ் யாரு?டாக்டர் சங்கரா... மைக்கேலா?''

'மைக்கேல் சார்.''

'டாக்டர் மைக்கேலை எனக்குத் தெரியும்'' - நம்பர் போட்டார்.

'சார்... நான் விருகம்பாக்கம் எஸ்.ஐ வினோத் பேசுறேன். திருவல்லிக்கேணியில இருந்தப்ப உங்களைச் சந்திச்சிருக்கேன்.''

'தெரியும் வினோத்... சொல்லுங்க.''

'சார்... அந்த ஸ்கூல் பொண்ணு போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிட்டா?''

'இப்பதான் முடிச்சேன். வினோத்... அந்தப் பொண்ணு கர்ப்பம்.''

'சார்... என்ன சொல்றீங்க?''

கலைவாணி, நிமிர்ந்து வினோத்தைப் பார்த்தாள்.

'மேடம்... அந்தப் பொண்ணு கர்ப்பமாம்.''

கலைவாணி முகம் பேய் அறைந்ததுபோல் ஆனது.

'வாட்... சார், நான் டாக்டர்கிட்ட பேசலாமா... ப்ளீஸ்..!''

வினோத் என்ன சொல்வது எனப் புரியாமல் செல்போனை கலைவாணியிடம் கொடுத்தார்.

'சார்... நான் அந்தப் பொண்ணு பிரியாவோட டீச்சர் கலைவாணி பேசுறேன். போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். நான் அடிச்சதாலதான் சூசைட் பண்ணிக்கிட்டதா...''

'தெரியும் மேடம். நீங்க தப்பிச்சுட்டீங்க. 'மேட்டர் தெரிஞ்சு கண்டிச்சேன்’னு சொல்லிடுங்க. உங்களுக்கு இனிமே பிரச்னை வராது. பொண்ணு எவன்கூடவோ அத்துமீறி பழகி...''

'தெரியும் சார். 'ரெண்டு மாசத்துக்கு முந்தி கிளாஸை கட் பண்ணிட்டு, கூடப் படிக்கிற பையன்கூட மகாபலிபுரம் வரைக்கும் போனேன். அங்க அவன் என்னை செல்போன்ல படம் எடுத்துட்டான். அதைக் காட்டி 'ஜாலியா இருக்கலாம் வா’னு அடிக்கடி மிரட்டுறான். எனக்குப் பயமா இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க மேடம்’னு அழுதா. கோபத்துல நான் அவளை அடிச்சேன்; அந்தப் பையனோட அப்பா சாதி கட்சி பேக்ரவுண்டு உள்ளவர். பொண்ணோட ஃபேமிலியும் அப்படித்தான். நான் அந்தப் பையனைக் கண்டிச்சு செல்போன்ல இருக்கிற படத்தை அழிச்சுட்டு, பிரச்னை வெளியே போகாம,யாருக்கும் தெரியாம முடிக்கணும்னு நினைச்சேன். அந்தப் பையன்கிட்டேயும் பேசிட்டேன். அவனும் ஸாரி கேட்டுட்டு 'டெலிட் பண்றேன்’னு சொல்லிட்டான். இதை பிரியாகிட்ட சொல்லி, 'பயப்படாத நான் பார்த்துக்கிறேன்’னு செல்போன்லயே அவளுக்கு கவுன்சலிங் கொடுத்தேன். ஆனாலும் பயந்துட்டா... அவசரப்பட்டு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுட்டா.

சார்... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ப்ளஸ் ஒன் படிக்கிற பொண்ணு. கூடப் படிக்கிற பையன்கூடப் பழகி கர்ப்பமாயிட்டானு தெரிஞ்சா,அவங்க பேரன்ட்ஸ், மத்த பேரன்ட்ஸ் எல்லாருக்கும் அதிர்ச்சியா இருக்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னை அடிக்கணும்னு நெனக்கிறவங்களுக்குப் பையனோட பேக்ரவுண்டு தெரிஞ்சா, பெரிய விபரீதம் ஆயிரும்; ஸ்கூல் பேரும் கெடும். இதை நம்மளோட முடிச்சுப்போம் டாக்டர்.''

'என்னது நம்மளோட முடிச்சுப்போமா?விளையாடுறீங்களா? ரிஸ்க் மேடம். அதோட இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே போனாத்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இல்லைனா நீங்க ஆயுள் முழுக்க போலீஸ் பாதுகாப்போடதான் இருக்கணும்.''

'பரவாயில்லை. அதை நான் சமாளிச்சுக்கிறேன். கர்ப்பம்னு நீங்க குறிப்பிட்டு அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே வந்தா,அதனால ஏற்படப்போறது... பெரிய சமூக இழப்பு. நிச்சயம் இஷ்யூ ஆகும். ரெண்டு பக்கமும் பகை ஏற்படும். சாதிக் கலவரம் உண்டாகும். பிரியா தொடர்புடைய வீடியோ படங்கள் அந்தப் பையன்கிட்ட இருந்தா, அது வெளியே வரலாம். அவங்க பேரன்ட்ஸுக்கு அது காலம் காலமா அழிக்க முடியாத அவமானம். பெத்த பொண்ணை அநியாயமா அள்ளிக் கொடுத்தவங்களுக்கு வேற எந்த அதிர்ச்சியும் வேணாம் சார்... ப்ளீஸ். எல்லா நேரங்கள்லயும் ரூல்ஸ் பார்க்க முடியாது. சில நேரங்கள்ல விதிமுறை, சட்டம் இதெல்லாம் தாண்டி சுதந்திரமா சிந்திக்கணும்;முடிவெடுக்கணும்; செயல்படணும்.''

மறுமுனை அமைதியாக இருந்தது.

'சார்... இதே மாதிரி ஒரு சூழ்நிலையை நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஃபேஸ் பண்ணியிருக்கேன். அப்ப டாக்டரும் போலீஸும் ஒத்துழைச்சாங்க. அப்புறம் உங்க இஷ்டம்...''

கலைவாணி, செல்போனை வினோத்திடம் நீட்டினாள்.

சப் இன்ஸ்பெக்டர் வினோத் அதிர்ந்துபோய் கலைவாணியைப் பார்த்தபடியே இருந்தார்.

அதிகாலையில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கலைவாணி கண்விழித்தாள். எழுந்து முகம் துடைத்துக்கொண்டு தயக்கமாக வாசல் கதவைத் திறந்தாள்.

நடுத்தர வயதில் அந்தத் தம்பதியினர் நின்றிருந்தார்கள். கையில் மல்லிகைப் பூப்பந்து. அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்கள்.

கலைவாணி குழப்பமாக 'யார் நீங்க? என்ன வேணும்?’ எனக் கேட்க முற்படும்போது ஆட்டோவில் இருந்து வேஷ்டி சட்டை அணிந்து சப் இன்ஸ்பெக்டர் வினோத் இறங்கிக் கொண்டிருந்தார்!

பின் குறிப்பு
கலைவாணிகள் சிலரும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்- பல்வேறு துறைகளிலும்.
ஆனால், களவாணிகளின் கதைகள்தான்
ஊடகங்களில் ஊறி நாறிப் பரவுகிறது. எனவே,
கலைவாணிகளைக் கண்டு பாராட்டவேண்டும். இந்த  கதையை  எதார்த்தமாகச் சொன்ன திருவாரூர் பாபுவுக்கு பாராட்டுகள். விகடனுக்கு நன்றி.